கூடங்குளம் பிரச்னையில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அணுமின் நிலையத்தை திறக்காவிட்டால், எங்கள் விஞ்ஞானிகளை வாபஸ் பெறுவோம் என்று மத்திய அரசுக்கு ரஷ்யா திடீர் கெடு விதித்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம், தொடர்ந்து போராட்டங்களால் திறக்கப்படவில்லை. அங்கு கட்டமைப்பு பணிகளுக்காக அமர்த்தப்பட்ட ரஷ்ய விஞ்ஞானிகள், மாதக்கணக்கில் வேலையின்றி தங்கியுள்ளனர். அணுமின் உற்பத்திக்கான பணிகளை அவர்கள் ஆரம்பித்து வைக்க உள்ளனர். ஆனால், எதிர்ப்பு வலுத்ததன் விளைவாக அணுமின் நிலையம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், ரஷ்யா வேதனை அடைந்துள்ளது.
எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு, ‘நட்புறவுக்கான ரஷ்ய அதிபரின் விருது‘ இன்று சென்னையில் வழங்கப்பட உள்ளது. இந்த விருதை இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கடாக்டின் நேரில் வழங்க டெல்லியில் இருந்து நேற்று சென்னை வந்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில், தூதர் அலெக்சாண்டர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
கூடங்குளம் அணுமின் நிலையம்தான் உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான அணுமின் நிலையமாகும். ஜப்பான் நாட்டில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்துக்கு பிறகு மக்களிடம் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. புகுஷிமா அணுமின் நிலையம் அமெரிக்காவின் பழைய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டது. கூடங்குளம் அணுமின் நிலையம் தற்போதைய நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளதால், பெரியளவில் பூகம்பம் ஏற்பட்டாலும் அணுமின் நிலையத்துக்கு ஆபத்து இருக்காது. கூடங்குளம் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாங்கள் அவர்களிடம் நேரிடையாக சென்று சமரசம் செய்ய மாட்டோம். இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். ரஷ்யா எப்போதும் இந்தியாவுடன் தொடர்ந்து நட்புறவுடன் செயல்பட்டு வருகிறது. நட்புநாடுகள் என்று கூறிய சில நாடுகள் கூட இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியபோது நிர்ப்பந்தம் செய்தது. அப்போதும் ரஷ்யா இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தது.
1988ம் ஆண்டு கார்ப்பசேவ் ரஷ்ய அதிபராக இருந்தபோது இந்திய பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியுடன் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு முதலாவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இவ்வளவு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடுவதற்கு என்ன காரணம் என்று ஆச்சரியமாக உள்ளது. போராட்டத்துக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்று இந்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்.
கூடங்குளம் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. கூடங்குளத்தில் பணிகள் எதுமின்றி எங்கள் நாட்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளை நீண்ட காலம் வைத்திருக்க முடியாது. விஞ்ஞானிகளின் சேவை ரஷ்யா உள்ளிட்ட சில இடங்களில் அமைக்கப்பட உள்ள அணுமின் நிலையத்துக்கு தேவைப்படுகிறது. இதனால் விஞ்ஞானிகளை வாபஸ்பெற வேண்டிய நிலை ஏற்படும்.
கூடங்குளம் பிரச்னையை தீர்த்து அதை திறக்க இந்தியா விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விஞ்ஞானிகளை வாபஸ் பெறுவதை தவிர வழியில்லை. கூடன்குளத்தில் முதல் யூனிட் செயல்பாட் டுக்கு தயாராக உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மின்சார தேவையை சமாளிக்க மிகவும் உதவியாக இருக்கும். தமிழக முதல்வரும் பிரதமரிடம் மின்சாரம் கேட்டு வருகிறார். இதற்கு கூடங்குளம் அணுமின் நிலையம் மட்டுமே தீர்வாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
* 1989: கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவது ஆரம்பம்.
* 2002: ரூ.13,500 கோடி மதிப்பீட்டில் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலை கட்டுமானப் பணிக்கு மார்ச்சில் கான்கிரீட் போடப்பட்டது.
* 2011: முதல் அணு உலை பணிகள் 99 சதவீதம் முடிந்து விட்டது. டிசம்பரில் மின் உற்பத்தியை துவங்க
திட்டமிடப்பட்டிருந்தது.
* 2012: மே மாதம் 2வது அணு உலையின் மூலம் மின் உற்பத்தி துவங்க திட்டமிடப்பட்டது.
2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தியானால் தமிழகத்திற்கு 925 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
No comments:
Post a Comment